ஒன்பது நாவல்களை எழுதியவர் என்றாலும், தி.ஜானகிராமன் என்றதும் ‘மோக முள்’தான் முன்னால் வந்து நிற்கிறது. முதிரா இளைஞன் ஒருவன் தன்னைவிட வயதில் மூத்தவளின் மீது கொள்ளும் மோகமே நாவலின் மையம். ‘மோக முள்’ வெளிவந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு இதே கருப்பொருளில் மலையாளத்தில் ‘ரதிநிர்வேதம்’ என்றொரு குறுநாவலை எழுதினார் பி.பத்மராஜன். ‘மோக முள்’ மலையாளத்தில் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன்பே ‘ரதிநிர்வேதம்’ வெளியாகிவிட்டது. பத்மராஜனின் நண்பர் பரதன் அதைத் திரைப்படமாக இயக்கினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் அது புதிய திரைவடிவம் கண்டது. ‘ரதிநிர்வேதம்’ காட்சிக்காவது விருந்தாயிருந்தது. ‘மோக முள்’ திரைவடிவம் அந்த அனுபவத்தையும் அளிக்கவில்லை.
‘மோக முள்’ளை வாசித்தவர்கள் அதன் உயிர்ப்பான தருணங்களைத் திரைப்படத்திலும் எதிர்பார்த்து ஏமாந்தார்கள் என்றால், திரையில் மட்டுமே பார்த்தவர்களுக்கும் ஏமாற்றத்தையே அளித்தது.