ஓலைச் சுவடிக் காலத்தில் படைக்கப்பட்ட பெரும் கவிதை இலக்கியங்களை, மிகச் சிறந்த கல்வி அறிவும், பரந்துபட்ட இலக்கிய உணர்வும் உள்ளவர் மட்டுமே படிக்க முடியும் என்ற சூழல் நிலவியது. கதைகளைப் படிக்க, படித்துப் புரிந்து கொள்ளச் செய்யுள் வடிவம் சாதாரண மக்களுக்கு இடையூறாக இருந்தது. முதலில் செய்யுளைப் பிரித்துப் படித்து அதன் முழுப்பொருளையும் புரிந்து கொண்டு, கதையை விளங்கிக் கொள்ளுதல் மக்களுக்குச் சிரமமாக இருந்தது. செய்யுள் வடிவம் சில கட்டுப்பாடுகளுக்குரிய யாப்பு வடிவமாக இருந்ததால் கதை ஓட்டம் பாதிக்கப்பட்டது. கதையைப் படிக்க விரும்புவோர் மிகப் பெரும் இடர்களுக்கு உள்ளாக வேண்டியிருந்தது.
உரைநடையில் அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை தேவையில்லை. மேலும் சாதாரண மக்கள் பேசும் நடையிலேயே எழுதுவது சுலபம். படிப்போரும் மிகச் சுலபமாக நாவலைப் படிக்க இயலும். எனவே உரைநடை வடிவத்தில் கதையை எழுதி நாவல் இலக்கியம் உருவாக்கினர்.